Saturday, March 15, 2008

பெண்மை காக்கப்படல் வேண்டும்...



சென்னை எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த சரிகாஷா மற்றும் அவரது தோழிகள் கடந்த 18.7.98 அன்று கல்லூரி சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் இளைஞர் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய முருகன், ஹரி, சரவணன், பன்னீர் செல்வம், ஸ்ரீதர், வினோத், சி.ஸ்ரீதர், பிரபுதாஸ், புகழேந்தி ஆகிய ஒன்பது பேரும் ஒரு ஆட்டோவில் அந்த சாலையில் வந்துகொண்டிருந்தனர்.


அப்போது சரிகாஷா மற்றும் அவரது தோழிகள்மீது தங்கள் கைகளில் இருந்த தண்ணீர் பாக்கெட்டை பீச்சிஅடித்து கேலி செய்தனர். ஆட்டோவில் இருந்த ஹரி திடீரென்று சரிகாஷா மீது விழுந்தார், இதனால் சரிகாஷா கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார்.


இச்சம்பவம் சென்னையில் மட்டுமல்லாது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளைக் கைது செய்யகோரியும், பெண் களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரியும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் விளைவாக தமிழக அரசும் பெண்கள் கேலி செய்வதைத் தடுக்க (ஈவ் டீசிங் ஆக்ட்) தனிச்சட்டம் கொண்டுவந்தது.


குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சென்னை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டு 26.4.2001 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.8000/- அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில் 14.03.2008 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் விபரம் பின்வருமாறு...


பெண்களுக்கு எதிராக கருக்கலைப்பு, வரதட்சணைக் கொடுமை, பாலியல் கொடுமை, சிறுமிகளைக் கற்பழித்து கொலை செய்தல் போன்ற வன்கொடுமை கள் நடக்கின்ற, இந்தக் கொடுமைகளில் ஒன்று பெண்களை கேலி செய்யும் ஈவ்டீசிங் ஆகும். பொது இடங்களில் பெண்களை கேலி செய்தால், அப்பெண் கள் கவுரவத்தை இழக்கிறார்கள். அவர்கள் உரிமை பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமூகக்குற்றமாகும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் தான்.


நாகரிகம் உள்ள சமூகம் இதை எளிதாக விட்டுவிட முடியாது.ஈவ்டீசிங் காரணமாக ஒரு அப்பாவி பெண், அதாவது கல்லூரி மாணவி, கல்லூரி அருகிலேயே பலியாகி உள்ளார். அவரது பிறந்தநாள் அன்று இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்த பிறகு பொது இடங்களில் பெண்களை கேலி செய்வதை முற்றிலும் அகற்ற முடிவு செய்த தமிழக அரசு, தமிழ்நாடு பெண்கள் கேலி தடுப்பு சட்டத்தை 1998 ல் இயற்றியது. இச்சட்டம் அமலுக்கு வந்த பின்பும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பயத்தால் வெளியில் சொல்லாமல் உள்ளனர்.


பெண் என்ற ஒரு காரணத்திற்காக அவர்கள் மீது சிலர் வன்மையாக நடந்து கொள்கின்றனர். இது போன்ற சம்பவம் நடக்கும்போது, அதில் இருந்து காத்துக்கொள்ளவும், சுயநம்பிக்கையுடன் வாழவும் நேரம் வந்துள்ளது. பெண்கள் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசுகுக்கும், சமூகத்திற்கும் உள்ளது. சரிகாஷா சம்பவத்தை பொறுத்த வரையில்,. பொது சாலையில் பட்டப்பகலில் விரட்டி ஈவ்டீசிங் நடத்தியதால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அந்தமாணவி அமைதியாக இருந்ததால் தான் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. தன் மீது தண்ணீர் பீய்ச்சும்போது ஏன் செய்கிறீர்கள்? என்று கேட்டிருந்தால், தப்பித்தால் போதும் என்று 9 பேரும் தப்பி ஓடியிருப்பார்கள்.அவர் தைரியதாகக் கேட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. ஆனால் அமைதியாக பயந்துபோய் இருந்ததால் தான் அவர் மேலே விழுந்துள்ளனர். இதனால் அவர் முழுமையாக அமைதியாக இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.


ஒவ்வொரு நாளும் சமூகவிரோதச் செயல்களில் பெண்கள் பல சங்கடங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை தடுப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். சமூக ரீதியாக, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசுக்கு இந்த கோர்ட் பரிந்துரை செய்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பெண்க ளுக்கு ஒரு சிறப்பு பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும். நமது நாட்டில் உள்ள சட்டங்கள் குறித்தும், எந்தெந்த நிவாரணங்களை சட்டரீதியாக பெறலாம் என்பது குறித்தும், இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கும் போது அதைத்தடுக்க முறை என்ன? என்பது குறித்து அந்தப்பாடத்தில் சொல்லித்தர வேண்டும்.இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைவரும்போது தைரியத்துடன் எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதை நிபுணர்கள் பற்றிகள் மற்றும் கல்லூரிகளில் வாரத்திற்கு ஒருமுறை பாடம் எடுக்க வேண்டும். பெண்களிடமிருந்து வரும் புகார்கள் மீது போலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேற்கண்ட 9 பேருக்கும் சென்னை செசன்சு கோர்ட் விதித்த தண்டனை சரியானதே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கூறியுள்ளது.மேற்கண்ட தீர்ப்பு மிகவும் வரவேற்க்கத்தக்கதே.. பெண்கள் மீதான கொடுமைகள் குறித்து உயர்நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை.


ஆனாலும், நீதிபதி அவர்களே தனது தீர்ப்பில், பெண்கள் மீதான கொடுமை களுக்கு எதிராகச் சட்டம் அமல்படுத்தப்பட்டும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனும் போது ஆணாதிக்க, பெண்ண டிமைச் சிந்தனையின் வெளிப்பாடகவே பெண்கள் மீதான இத்தாக்குதல்கள் கருதப்பட வேண்டும்.ஆண்களும், பெண்களும் சமம் என்ற என்பது வெறும் பேச்சளவில் இல்லாமல், உண்மையில் அவர்களுக்கும் சம உரிமை மற்றும் பெண்கள் மீதான தங்களது பார்வையை ஆண்கள் மாற்றிக்கொள்ளல், போலிசாரும் பெண்கள் அளிக்கும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தல், பெண்கள் கூடும் இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பளித்தல், பெற்றோரும் தங்கள் குழந்தைகளை எல்லா பயிற்சியும் அளித்து வளர்க்க வேண்டியது அவசியமும், தேவையுமாய் இருக்கிறது.

No comments: