Friday, March 14, 2008

மேலை நாடு நோக்கி...

கி.பி. 606 - 647

நான்காம் நூற்றாண்டு முதலே கல்வி கற்பதற்கான மிகச் சிறந்த இடமாக இந்தியா திகழ்ந்தது. அதனால் இந்தியா பல வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்தது. அரசின் நிதியுதவியோடு நாளந்தா, உஜ்ஜயினி, கயா மற்றும் தட்சசீலத்தில் சிறந்த கல்வி மையங்கள் செயல்பட்டன. இங்கே இடம் கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தது. கல்வியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.

அத்தகையோர் வரும்போது அவர்களுக்கு என்ன காத்திருந்தது? மிகக்கடினமான நுழைவுத் தேர்வும், அதில் தேர்ந்துவிட்டால் கலாச்சார வேறுபாடும், தாய்மண் ஏக்கமும் தான். தேர்விலே வெற்றி பெற்ற “லீ”யினால் இவை அனைத்தையும் தாண்டி வர முடிந்ததா?



சிறிய குவளைகளில் தேநீரை ஊற்றும் போது “லீ”யின் கைகள் பதட்டமுற்றன.

இந்த விநோதமான தேநீரை அவனது நண்பன் சரிபுத்தா பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. தேயிலை எனும் புதர்ச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் அவனைக் கவரவில்லை எற்ன போதும், நண்பனின் மனம் புண்படாமல் பார்த்துக்கொண்டான். தன் தாய்நாட்டிலிருந்து இந்த இலைகளைப் பத்திரப்படுத்திக் கொண்டு வந்தததிலிருந்தே, அது அவனுக்கு எவ்வளவு விருப்பமானது என அறிந்து கொண்டான். எனவே, அதனை வெகுவாய் ரசித்துக் குடிப்பது போன்று உறிஞ்சினான்.

“இதே விழாவிற்கு நீ முன்னமும் வந்ததாய் கூறினாயே சரிபுத்தா?”

“ஆம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தேன். அப்போது ஹர்சரின் தலைநகரம் பிராயக் அல்ல, கன்னோதி, அங்குதான் விழா நடைபெற்றது.”

“அவ்விழா எவ்வாறிருந்தது நண்பா?”

“மிகச் சிறப்பாக இருந்தது லீ. அதிலும் யுவான் சுவாங்கின் அமர்வு மிகச் சிறப்பாக இருந்தது. அவர் உனது சீனநாட்டிலிருந்து வந்திருந்தார். மகாயான புத்தமதம் பற்றிய விவாதம் இருபத்து மூன்று நாட்கள் நடந்தது. அதில் என்னைப்போன்ற நான்காயிரம் பௌத்த துறவிகள் பங்கேற்றுள்ளோம் லீ.”

“பௌத்த துறவிகள் மட்டுமா பங்கேற்றனர்?” “இல்லை பலரும் பங்கேற்றனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஜைன முனிவர்கள், பல பிராமண அறிஞர்கள், அரசர்கள் பங்கேற்றனர். நான் விவாதங்களில் பெரும் பங்கு வகிக்கவில்லை. அவற்றை கேட்பதிலேயே ஆர்வமாயிருந்தேன்.”
லீ சிரித்துவிட்டான்.

“இதை நம்ப மாட்டேன் நண்பா. கேள்வி கேட்பதிலும், விவாதிப்பதிலும் நீ ஈடுபடாவிட்டால் உனக்கு மன நிறைவே இராது.”

“ஆமாம். உண்மைதான். ஆனால் அப்போது நான் மிகவும் கூச்ச சுபாவமுடையவனாயிருந்தேன். பல ஆண்டுகளாய் இங்கு விவாதத்தின் மூலம் கற்கத் துவங்கியதனால் தான் இப்படி மாறிப்போனேன்.”

“நான் இன்னும் கூட கூச்ச முடையவனாகவே உள்ளேன் சரி புத்தா. முதன் முதலில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆறுமாடிக்கட்டிடத்தின் முன் நின்று பிரமித்துப்போனேன். இங்கே நான் என்ன செய்யப்போகிறேன் என்று மிரண்டு போனேன். நுழைவுத் தேர்வில் தேறுவேனா எனவும் ஐயங்கொண்டேன்.”

“ஆனால் நீதான் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாய் லீ! தேர்வு எழுதும் ஒவ்வொரு பத்து மாணவர்களில் இருவரோ, மூவரோதான் தேர்ச்சி அடைவர் எனக்கூறப்பட்டது.”

“எப்படியோ உலகின் தரமான கல்வியை நாளந்தா பல்கலைக்கழகத்தில் பெறும் பத்தாயிரம் அதிர்ஷ்டக்கார மாணவர்களில் நானும் ஒருவனாகிவிட்டேன். உணவு, உறைவிடம் அனைத்தும் இலவசமாய் பெறுவது அதிர்ஷ்டமின்றி வேறென்ன? சீனத்திலிருந்து வெகுதூரம் பயணித்து இங்கு வந்த பின் இடம் கிடைக்காமல் திரும்பினால், என் குடும்பத்தாருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? இங்கே நான் அனுமதிக்கப்பட்ட பின்பும் கூட என்னால் நம்ப முடியவில்லை!”

சரிபுத்தன் தன் தேநீர் குவளையைக் காலி செய்தான். “லீ உனக்கு இங்கு இருக்கும் மலையளவு கல்விப்பணிகளில், உன் துவக்ககால பதட்டமெல்லாம் பறந்து போகும். சரி பிரயாக் பயணத்திற்கு நீ தயாராகிவிட்டாயா?”

“தயார் நண்பா. கிளம்புவோம்.”

இருவரும் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தைத் தாண்டி பல கிராமங்களையும், நகரங்களையும் கடந்தனர். ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் நடந்து சத்திரங்களில் தங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் சந்தித்த ஒவ்வொருவரும் அந்த விழாவினைப் பற்றியே பேசினர்.
கிராமங்களையும், நகரங்களையும் கடந்த அந்தப் பயணம் புதிது புதிதாய் நிறைய அனுபவங்களைத் தந்தது. சீனத்தைப் போலன்றி மக்களின் தைக்கப்படாத நீண்ட ஆடைகள் புதிதாய் இருந்தன. பெரும்பாலான வீடுகள் களிமண்ணாலோ, செங்கல்லாலோ கட்டப்பட்ட கூறைவீடுகளாய் இருந்தன. முன்பின் அறிமுகமற்றவர் வீடுகளில் இருமுறை தங்க நேர்ந்தது. அவர்களின் உபசரிப்பும், சுத்தமான வீடுகளும் அவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டதும் மிகுந்த மனநிறைவைத் தந்தன.

ஒரு நகரைக்கடக்கும் போது கேட்ட மேளச்சத்தத்திற்கான விளக்கம் அறியும் வரை இந்நாடு பற்றிய மிக உயர்ந்த எண்ணமே கொண்டிருந்தான் லீ!

திடீரெனக் கேட்ட கொட்டுச் சத்தத்தினைத் தொடர்ந்து தெருவிலிருந்த பலரும் விரைந்து ஓடினர்.
“என்ன சத்தம் இது சரிபுத்தா?” என்று கேட்டான் லீ.

“நகரத்தின் இந்தத் தெருவுக்குள் தாழ்த்தப்பட்ட சாதி மனிதன் யாரோ வருகிறான். ஒரு புலையனாக இருக்கலாம். அவர்கள் நகருக்கு வெளியே வாழ்கின்றர். அவர்கள் நகரத்துக்குள் வரும்போது அவர்களைக் கண்டோ, தீண்டியோ மேல் சாதியினர் புனிதம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முன்னறிவிப்பு செய்ய அந்தச் சத்தம் எழுப்பப்படுகிறது லீ” என விளக்கினான் சரிபுத்தன்.


“என்ன கொடுமை இது! இந்தியாவின் மேன்மை கண்டு எவ்வளவோ வியந்துள்ளேன். அத்தகைய நாட்டில் இத்தனை கொடூரமான நடைமுறையா? இத்தனை அநாகரீகமான தீண்டாமை இந்தியாவில் உள்ளதா? எப்படி இதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது உன்னால்?” என்று படபடத்தான் லீ.

“நான் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை நண்பனே. ஆனால் நான் ஒருவன் என்ன செய்துவிட முடியும்?” என்றான் சரிபுத்தன்.

லீ வழிநெடுக தன் மனவேதனையைப் பகிர்ந்து கொண்டான். பேசப்பேசத்தான் ,துபோன்ற நடைமுறைகள் கல்வியில் சிறந்த இந்தியாவில் இருப்பதை அறிந்து கொண்டான். அரசர் ஹர்சரின் சகோதரி தன் கணவன் இறந்ததும், உடன் கட்டை ஏற முயன்றதும், அதனை ஹர்சர் தடுத்து நிறுத்தியதையும் அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தான். அறிஞர்கள் பெருகிய இந்தியாவில் சாதிக் கொடுமை, தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் எனும் கொடுமைகள் இருப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்று மாலை சத்திரத்தில் ஓய்வு எடுக்கும்போது தனக்கும், சரிபுத்திரனுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு திரை விழுந்துவிட்டதைப் போல் உணர்ந்தான் லீ! அவனை எத்தனை சமாதானப்படுத்தியும் சரிபுத்தனால் இயல்பாக்கிட முடியவில்லை.

அவன் குழப்பத்திலும், வேதனையிலும் தூக்கமின்றி தவித்தான். அவனுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது.

சீனர்களிலும் மேம்பட்டவர்கள் இந்தியர்கள் எனும் லீயின் எண்ணம் தகர்ந்தது.
மக்கள் எல்லா இடங்களிலும் ஒன்று போலத்தான் உள்ளனர். அவர்களின் வெளிப்படுத்தல்தான் வெவ்வேறாக உள்ளது என எண்ணினான்.

தூக்கம் வரும்வரை இதனையே நினைத்து குழம்பிக்கொண்டிருந்தான்.
மறுநாள் அதனை மறந்து மீண்டும் பயணம் தொடர்ந்தது. நகரெங்கும் பயணிகள் நிறைந்திருந்தனர். தெருக்களில் வணிகர்களும், மலர்கள், கொடிகள் விற்போரும் நிறைந்திருந்தனர். வீதிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அதிகாலையில் லீ தனது நண்பன் சரிபுத்தனோடு புனித கங்கையில் நீராடச்சென்றான். அதன் பிரமாண்ட அகலத்தைக் கண்டு பிரமித்தான். பிரயாக்கில் யமுனையும் கலப்பதால் இரண்டும் இணைந்து மிரட்டின.

“பல மதங்களின் கருத்துக்களை இணைக்கும் விழா இந்நதிக்கரையில் நடப்பது எவ்வளவு பொருத்தமானது,” லீ வியந்து கூறினான்.

புத்தரை மட்டுமின்றி, சிவனையும், சூரியனையும் அரசர் ஹர்சர் வழிபடுகிறார் என அறிந்து மகிழ்ந்தான். பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட அறிஞர்கள் ஒன்று சேர்ந்து தத்தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
“ஒவ்வொரு நதியும் தனது பாதையின் மூலம் ஒரே கடலைச் சென்றடைவதைப் போலத்தான் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரே இலக்கைச் சென்றடைகிறது” சரிபுத்தன் ஒருநாள் இவ்வாறு விளக்கினான்.
லீ ஒப்புக்கொண்டான். “ஆமாம் சரிபுத்தா. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான மனித அவமதிப்பு தொடர்கிறது. எனக்கு ஒன்றும் உனக்கு ஒன்றுமாய் ஆனபோதிலும் எல்லா மதக்கருத்துக்களும் விவாதிக்கப்பட வேண்டியவைதான்.”

பல்வேறு அறிஞர்களைச் சந்தித்தது குறித்து மிகுந்த பெருமை கொண்டான் லீ. ஆனார் ஹர்சரைப் பார்த்ததும் மிகுந்த ஆச்சரியமடைந்தான். அரசர் தங்க, வைர ஆபரணங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்தார். மார்பை வைரக்கற்களும், கழுத்தைப் பொன் ஆபரணங்களும் அலங்கரித்தன. ஹர்சவர்த்தனர் எளிய மனிதர் என அவன் கேள்விப்பட்டிருந்தான்!
“இவ்வளவு நகைகளை சுமந்து கொண்டிருப்பது மிகவும் கடினம். என்னால் இதைச் சுமந்துகொண்டு நேராக நிற்கக்கூட முடியாது சரிபுத்தா!”

“பொறு பொறு லீ. இன்னும் சிரிது நேரத்தில் உனது கருத்துக்களை நீயே மாற்றிக்கொள்வாய்.”
விழா முடிவுக்கு வந்ததும், ஹர்சர் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் தன் கஜானாவில் இருந்த செல்வங்களை ஒவ்வொன்றாய் வழங்கத் துவங்கினார். நீளமான வரிசையில் ஏழைகள் அரசர் ஹர்சரிடம் பரிசு பெறக் காத்திருந்தனர். தனது சொந்தச் செல்வங்களைப் பெட்டி பெட்டியாய் வழங்கிக் கொண்டிருந்தார் அரசர். லீ அரசர் ஹர்சரை நினைத்துப் பெருமைப்பட்டான்.
“கஜானா தீர்ந்துவிட்டதே. அரசர் இப்போது என்ன செய்யப் போகிறார் சரிபுத்தா?” எனக்கேட்டான் லீ.

“பொறுத்திருந்து பார்ப்போம்!”
கஜானா தீர்ந்ததும், அரசர் தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாய் வழங்கத் துவங்கினார். வரிசை முடியும்போது அரசரிடம் நகை ஏதும் இருக்காது. கடைசி மனிதன் வரும்போது அவனுக்குத்தர அரசரிடம் எதுவும் இல்லை தான்.

அவன் அரசனைப் பார்த்து, “அரசே, உங்களைக் கண்டதே போதும். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் ஆட்சியில் எனது தேவைகள் அனைத்தும் பூர்த்தியடைந்துவிட்டன மகாராஜா!” என்றான்.

“இல்லை இல்லை. இத்தனை நேரம் காத்திருந்த உன்னை வெறும் கையோடு அனுப்ப முடியாது. பொறு” என்றார் ஹர்சர்.

மொத்த மக்கள் கூட்டமும் மௌனமாகியது. அரசர் தன் அருகில் இருந்த சகோதரி ராஜஸ்ரீயிடம் ஏதோ பேசினார். இருவரும் உள்ளே சென்றனர். அரசர் திரும்பி வரும்போது ராஜஸ்ரீயின் மேல் அங்கிகளை அணிந்து கொண்டு தனது அங்கியை கையில் வைத்திருந்தார். காத்திருந்த மனிதனுக்கு தனது அரச அங்கியைப் பரிசளித்தார்.

மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்து பாராட்டியது. லீ தனது பிரயாக் பயணத்தில் இது மறக்க முடியாத நிகழ்வாக என்றென்றும் நினைவில் நிற்குமென எண்ணிக் கொண்டான்.

“சரிபுத்தா நான் அரசனைப்பற்றிய எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். நீ சொன்னது சரிதான் உங்களுக்கு மிகச் சிறந்த அரசர் கிட்டியுள்ளார்” என்றான்.

த.வே.பத்மா
நன்றி துளிர்

No comments: