சென்னை சில்க்சும் - போரூர் மக்களும்
பத்திரிக்கைகளில் சமீபத்தில் வெளிவந்த இரு செய்திகள் கவனிக்கத்தக்கவை. ஒன்று சென்னை சில்க் கட்டிடத்தில் அத்துமீறி கட்டப்பட்ட தளங்களை அகற்றியது. மற்றொன்று சென்னை போரூர் ஏரியில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற வணிக நிறுவனங்களில் ஒன்றான சென்னை சில்க், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதியளித்த தளத்திற்கு அதிகமாகத் தளங்களைக் கட்டியதால் அதை இடிக்கக் கோரி டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கில், சென்னை சில்க் அனுமதி பெறாமல் அதிகமான தளங்களைக் கட்டியது தெரியவந்தது. எனவே, சென்னை உயர் நீதி மன்றம் அந்த அனுமதி பெறாத கட்டிடங்களை இடித்து தள்ள உத்தரவு இட்டது. இதை எதிர்த்து சென்னை சில்க் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை மாநகரத்தில் அனுமதியளிக்கப்பட்ட கட்டிடங்களில் சுமார் 32,000 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றங்களின் உத்தரவையடுத்து அக்கட்டிடங்களின் தளங்கள் பொதுமக்களின் நலனிற்காக (தீ அல்லது போதுமான வாகன நிறுத்துமிடம் போன்ற ஆபத்திலிருந்து தப்பிக்க) இடிக்கப்பட உள்ளது. இதுமேலும் ஹோட்டல்கள், அடுக்குமாடிகுடியிருப்புகள் போன்றவற்றிலும் உள்ள அனுமதி பெறாத கட்டிடங்கள் இடிக்க அல்லது மாற்றயமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
வணிக நிறுவனங்களின் ஒரே குறிக்கோள் லாபம் ஈட்டுவது மட்டுமே. அதை பெறுவதற்காக அவர்கள் குறைந்த வேலைக்கு ஆட்களைத தேர்வு செய்வதும், அவர்களுக்கு எந்தவித வசதிகளும் செய்து தராமல் தங்க வைப்பதும், எட்டுமணி நேர வேலை என்பதும் மறுக்கப்பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. தற்போது அவர்கள் தங்கள் லாபத்திற்காக சட்டத்தையும் மீறுவார்கள் என்பதை நீதிமன்றங்களின் தற்போதைய தீர்ப்பு உணர்த்தியுள்ளது.
பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமான அல்லது அவர்களால் நிர்வகிக்கப்படும் இத்தகைய நிறுவனங்களுக்கும், அவற்றை கட்டும் பெறியாளர்களுக்கும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் கட்டடங்களைக் கட்டுவது சட்ட விரோதம் என்று தெரியாதா? தெரிந்தே அவர்கள் சட்டத்தை மீறியுள்ளனர். பணம் இருந்தால் அவர்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற கருத்தை நீதிமன்றங்கள் தங்களுடைய தீர்ப்பின் வாயிலாக தகர்த்துள்ளன. தெரிந்தே, அரசை ஏமாற்றும் நோக்கத்துடன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
அடுத்து, போரூர் ஏரியில் ஆக்கிரமித்திருந்த வீடுகள் உட்படை அனைத்தும் அகற்றப்பட்டன என்பது. போரூர் ஏரியில் பல ஆண்டுகாலமாக மக்கள் வசித்துவருகின்றனர். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு கூடாது என்பது தான் நமது நிலையும் கூட. ஆனால், அவ்வாறு ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களல் பல கான்கிரீட் கட்டிடங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இக்கட்டிடங்களைக் கட்ட குறைந்த பட்சம் 6 மாதத்திலிருந்து 1 வருடம் தேவைப்பட்டிருக்கும்.
ஆறு மாதங்களுக்கும் மேலாக அக்கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில் அதிகாரிகள் 6 மாதம் முதல் 1வருடம் வரை அந்தப் பகுதிக்குச் செல்ல வில்லை என்பதை ஒத்துக் கொள்கிறார்களா? மேலும், அப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. அதை வழங்கி யவர்கள் அரசியல்வாதிகள் எனவும் கூறப்படுகிறது. மேலும் ரியல் எ°டேட் காரர்களின் கைங்கர்யமும் இதில் இருப்பதாகக்கூறப்படுகிறது. மக்களை ஏமாற்றிய அரசியல்வாதிகளுக்கும், ரியல் எ°டேட் காரர்களுக்கும் என்ன தண்டனை?
அரசு அவர்களுக்குமாற்று இடம் வழங்கியிருப்பதாகக் கூறுகிறது. இடம் மட்டும் வழங்கினால் போதுமா? வீடுகட்ட அவர்கள் பணத்திற்கு எங்கே போவார்கள்? எனவே அரசு அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் போன்ற அரசு குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்க வேண்டும்.
அரசும், அதிகாரிகளும் மழை காலம் போன்ற நேரங்களில் மட்டும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை விட்டு, எல்லாக் காலங்களிலும் நீர்நிலைப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டும். நமது நீர் நிலைகளில் நீர் சேகரித்தால் நாம் ஏன் அடுத்த மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்த வேண்டும்?
No comments:
Post a Comment